தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பத்தூர் அருகே மனைவியை வெட்டி கொலை செய்த தொழிலாளி

Published On 2022-11-09 06:15 GMT   |   Update On 2022-11-09 06:15 GMT
  • சரமாரியாக வெட்டியதால் படுகாயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் செல்வத்தை கைது செய்தனர்.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வலையபட்டியைச் சேர்ந்தவர் செல்வம். விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 48). இவர் விவசாய வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சண்முகவள்ளி (18) என்ற மகளும், சண்முகசுந்தரம் (16) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மல்லிகா கணவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல பலமுறை முயற்சி செய்தார். ஆனால் கணவர் வர மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை மல்லிகா கணவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அரிவாளை எடுத்து வந்து மனைவியை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற மல்லிகாவின் கட்டைவிரல் வெட்டுபட்டு துண்டானது.

தொடர்ந்து அவர் சரமாரியாக வெட்டியதால் படுகாயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் நாச்சியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் செல்வத்தை கைது செய்தனர்.

Similar News