தமிழ்நாடு

2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய குடும்பத்தினருக்கு மருத்துவ ஆலோசனை- அதிகாரிகள் முடிவு

Published On 2023-05-09 06:53 GMT   |   Update On 2023-05-09 06:53 GMT
  • கொரோனா அச்சம் காரணமாக தான், அவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடம் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தனர்.
  • 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் 3 பெண்கள் உள்பட 4 பேரும், அதிகாரிகள் அழைத்தும் வீட்டுக் கதவை திறக்காமல் உள்ளேயே இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் நேசமணிநகர் பழைய ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் பீனா. இவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர் ஒருவருடன் வசித்து வருகிறார்.

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாக சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. கொரோனா அச்சம் காரணமாக தான், அவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடம் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தனர்.

அப்போது, அக்கம் பக்கத்தினர் இது உண்மை தான் என்றனர். தாங்கள் அவ்வப்போது அழைத்துப் பார்த்த போதும், வீட்டில் இருப்பவர்கள் பதில் எதுவும் தருவதில்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரம் ஆன்லைன் டெலிவரி மூலம் அந்த வீட்டுக்கு பொருட்கள் வருவதாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பீனாவின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் யாரும் பதில் கொடுக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் கேட் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தினர். ஆனாலும் உள்கேட்டை அடைத்துக் கொண்ட பீனா அதை திறக்கவில்லை. கேட்டுக்கு மறுபக்கத்தில் நின்று கொண்டு அதிகாரிகளுக்கு பதில் அளித்த அவர், முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். எனக்கு சொந்தமான கடை மணிமேடை பகுதியில் இருக்கிறது. அந்த கடையை வாடகைக்கு விட்டுள்ளோம். அந்த கடைக்காரர் கடையின் முன் கண்ணாடி வைத்துள்ளார். அந்த கண்ணாடியை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடம் வந்து கேட்கிறார்கள்.

நாங்கள் வெளியே வந்தால் எங்களிடம் விசாரணை நடத்துவார்கள். மேலும் கொரோனா பரவல் வேறு இன்னும் இருக்கிறது. எனவே நாங்கள் வெளியே வரமாட்டோம் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையை வாடகைக்கு நடத்தி வரும் கடைக்காரரை காலி செய்து தரும்படி கேட்டு கலெக்டருக்கு மனு எழுதி தரும்படி பீனாவிடம் அதிகாரிகள் கேட்டனர். அதன்படி அவரும் மனு எழுதிக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மனுவை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், பீனாவின் வீட்டில் அவரது 2 மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 4 பேர் உள்ளனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். வெளியாட்களுக்கு பயந்து வீட்டுக்குள் இருப்பதாக கூறினார்கள்.

ஆனால் பீனாவின் 2 மகளும் நன்கு படித்தவர்கள். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல தெரிகிறார்கள். அவர்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய கடைகள் உள்ளது. அந்த கடைகள் மூலம் மாதம் தோறும் வாடகை பணம் வருகிறது. அதை வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனர். எது எப்படியோ, 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் 3 பெண்கள் உள்பட 4 பேரும், அதிகாரிகள் அழைத்தும் வீட்டுக் கதவை திறக்காமல் உள்ளேயே இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

Tags:    

Similar News