தமிழ்நாடு (Tamil Nadu)

ராகுலின் வருகை காங்கிரஸ் வெற்றியை மேலும் வலுப்படுத்தும்- தங்கம் தென்னரசு

Published On 2024-04-09 08:51 GMT   |   Update On 2024-04-09 08:58 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

நெல்லை:

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.

ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.

தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News