தமிழ்நாடு (Tamil Nadu)
மது விலக்கை அமல்படுத்த தி.மு.க. அரசு தயங்குகிறது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
- தி.மு.க.விற்கு மது விலக்கை கொண்டு வர மனமில்லை, வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை.
- தி.மு.க.பிறர் மீது பழிபோடும் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டாஸ்மாக் மூலம் வருகின்ற வருமானம் தமிழ்நாடு அரசுக்கு செல்கின்ற நிலையில், இதற்கு ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை. இந்தியாவில் குஜராத், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மது விலக்கு நடைமுறையில் இருக்கிறது. அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க தி.மு.க. அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை.
தி.மு.க.விற்கு மது விலக்கை கொண்டு வர மனமில்லை, வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை. மது விலக்கு குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் செயலாகும். தி.மு.க.பிறர் மீது பழிபோடும் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.