தமிழ்நாடு

மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் ஆட்குறைப்பு செய்வதா?- ராமதாஸ் கண்டனம்

Published On 2023-01-11 09:49 GMT   |   Update On 2023-01-11 09:49 GMT
  • மின்வாரியத்தில் மொத்தமுள்ள 1.45 லட்சம் பணியிடங்களில் 56,000 பணியிடங்கள், அதாவது சுமார் 40சதவீதம் பணிகள் காலியாக உள்ளன.
  • மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பணி ஒதுக்கீட்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து அனைத்து தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் மின்வாரிய நிர்வாகம் பேச்சு நடத்தியது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தின் திட்டங்கள் குறித்து கருத்து கேட்டு 19 தொழிற்சங்கங்களுக்கு மின்சார வாரியத்தின் நிதித்துறை இயக்குனர் சுந்தரவதனம் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மொத்தம் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரு யோசனைகள் ஆபத்தானவை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவையான இடங்களில், தனியார் மனித வள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஆட்களைப் பெற்று நியமித்தல், மின்வாரியத்தின் ஊதியச்சுமையை குறைக்கும் வகையில், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்தல் ஆகியவை தான் மின்சார வாரியம் செயல்படுத்தத் துடிக்கும் ஆபத்தான திட்டங்களாகும். இந்த இரு யோசனைகளும் மிகவும் பிற்போக்கானவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மின்வாரியத்தில் மொத்தமுள்ள 1.45 லட்சம் பணியிடங்களில் 56,000 பணியிடங்கள், அதாவது சுமார் 40சதவீதம் பணிகள் காலியாக உள்ளன.

மின்வாரியத்தில் 40சதவீதம் பணிகள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், தொழிற்சங்கங்களாலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம், இப்போது அந்த பணியிடங்களை பயனற்றவையாக காட்டி ஒழிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது மனிதவளத்தை சுரண்டும் செயலாகும்.

எனவே, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது, பணியிடங்களை ரத்து செய்வது ஆகிய திட்டங்களை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News