தமிழ்நாடு (Tamil Nadu)

வடலூரில் நாளை நடைபெற இருந்த சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

Published On 2024-05-03 07:30 GMT   |   Update On 2024-05-03 07:30 GMT
  • தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
  • வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது. இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து நாளை(சனிக்கிழமை) தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக போலீசாரிடம் அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்த்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் நெய்வேலி டி.எஸ்.பி. சபியுல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News