ராமேசுவரம் கடற்கரையில் ஒதுங்கிய 8 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல்- இலங்கைக்கு கடத்த முயற்சியா?
- கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக சமூக விரோதிகள் கஞ்சா, தங்கம் உள்ளிட்டவற்றை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் கடற்கரைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பார்சலை கைப்பற்றினர்.
அதை பிரித்துபார்த்த போது 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது பல லட்சம் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமேசுவரத்தில் இருந்து மர்ம நபர்கள் இலங்கைக்கு படகில் கடத்திச்சென்ற போது போலீசாரை கண்டதும் கஞ்சா பார்சலை வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.