போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது?- அன்புமணி கேள்வி
- போதைப் பாக்குகளைமென்று மயக்கத்தில் உறங்கிய அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார்.
- சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியரைத் தாக்கிய மாணவர், போதைப் பாக்குகளையும், புகையிலையையும் மெல்லும் வழக்கத்திற்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது. வகுப்பறையிலேயே போதைப் பாக்குகளைமென்று மயக்கத்தில் உறங்கிய அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார்.
சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ் நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.