தமிழ்நாடு

தாராபுரம் அருகே வேன்-கார்கள் மோதல்: தாய்-மகன் பலி

Published On 2023-08-27 07:13 GMT   |   Update On 2023-08-27 07:13 GMT
  • பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
  • பழனி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்:

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் இன்று காலை அவரது பெற்றோர் திருமூர்த்தி-தேவி மற்றும் சகோதரி சவுமியா ஆகியோருடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை சரவணன் ஓட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு பகுதியில் செல்லும் போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது, எதிரே பழனி கோவிலுக்கு சென்று விட்டு, நாமக்கல் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மீது மோதியதுடன், அந்த வழியாக சென்ற மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் சரவணன் மற்றும் அவரது பெற்றோர், சகோதரி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் சென்ற காங்கயம் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்தன், அபிராமி, அஜய், ஹாசினி, லலிதா ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 8பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக சரவணனின் தாய் தேவி கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுற்றுலா வேனில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக தாராபுரம் மணக்கடவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பழனி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News