அரசு பள்ளியில் தேர்வு அறையில் தூங்கிய மாணவரை எழுப்பிய ஆசிரியரின் மூக்கு உடைப்பு
- மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.
- தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சேகர் (46) என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர் பிளஸ் - 2 வகுப்புக்கு பாடம் எடுத்து வந்தார். தற்போது பள்ளியில் 2-ம் கட்ட பருவ தேர்வு கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வரும் மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.
இதையடுத்து மாணவரை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரிடம் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அந்த மாணவரை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்து உள்ளனர். அந்த தேர்வு அறையில் ஆசிரியர் சேகர் கண்காணிப்பாளாராக இருந்தார்.
ஆனால் அந்தமாணவர் மட்டும் தேர்வு எழுதாமல் மேஜை மீது படுத்து ஹாயாக தூங்கத்தொடங்கினார். இதனை கவனித்த ஆசிரியர் சேகர் மாணவரை தட்டி தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறினார். இதனை மாணவன் கண்டு கொள்ளாமல் மீண்டும் தூங்கத்தொடங்கினார். அப்போது அருகில் புகையிலை பாக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை கவனித்த ஆசிரியர் சேகர், மாணவரை கண்டித்து கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் திடீரென ஆசிரியர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முகத்தில் ஓங்கி குத்துவிட்டார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவரை மாணவர் விடாமல் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிரியர் சேகரின் முகம் முழுவதும் வீங்கி ரத்தம் கொட்டியது.
இதனை பார்த்து தேர்வு அறையில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மற்ற வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவரை சமாதானப்படுத்தி ஆசிரியர் சேகரை மீட்டனர். ரத்தம் சொட்ட,சொட்ட நின்ற சேகரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆசிரியர் சேகர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.