திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியது- பொதுமக்கள் பீதி
- போலீசார் மாட்டின் உரிமையாளர் யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்தசில நாட்களில் மாடுகளால் முட்டபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது 4-வது சம்பவம் ஆகும்.
சென்னை:
சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டி தூக்கிவீசும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவல்லிக்கேணியில் கடந்த வாரத்தில் வாய் பேச முடியாத முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய நிலையில் தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு முதியவரை மாடு முட்டி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். முதியவரான இவர் இரவு அந்த பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது.
இதில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கஸ்தூரி ரங்கனை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் மாட்டின் உரிமையாளர் யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் திருவல்லிக்கேனி பகுதிக்கு சென்று சாலையில் சுற்றியமாடுகளை பிடிக்க உத்தரவிட்டனர். அப்போது மாட்டின் உரிமையாளர்கள் சிலர் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் சுந்தரத்தை மாடு முட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்து செல்வி என்ற பெண் மீது மாடு முட்டி இழுத்து சென்றது. திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் கடந்தசில நாட்களில் மாடுகளால் முட்டபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது 4-வது சம்பவம் ஆகும்.