காங்கிரஸ் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும்?- ராகுலுக்கு திருமாவளவன் யோசனை
- வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார்.
- பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்க்கும் அளவுக்கு வலிமை பெறுமா? ஆட்சிக்கு வரமுடியுமா? என்ற சந்தேகம் காங்கிரசாரிடமும் உள்ளது.
இதற்கு வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை எதிர் கொள்ளும் வலிமை தேசிய அளவில் காங்கிரசிடம் மட்டுமே இருக்கிறது. காங்கிரசில் இருந்து வெளியேறிய தலைவர்கள் மாநில அளவில் கட்சிகளை தொடங்கியதால் சில மாநிலங்களில் வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. இதை சரி செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலிமை பெறும்.
காங்கிரஸ் இரண்டு முக்கிய வேலைகளை செய்ய வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து அணிக்குள் இணைக்க வேண்டும். பா.ஜனதா எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என்ற நிபந்தனையோடு செயல்படவேண்டும். இந்த இரண்டையும் செய்தால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும். அதற்கான ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பவர் ராகுல் மட்டும் தான். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.