காங்கிரஸ் கூட்டணியை கமல் விரும்புவது ஏன்?- தேர்தல் களத்தில் புதிய வியூகம்
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கமலை வரவேற்றுள்ளார்.
- கமல் காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி சேருவதில் உறுதியாகிவிட்ட நிலையில் எந்த கூட்டணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி டெல்லியில் ராகுல் நடத்தும் பாதயாத்திரையில் கமல் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கலந்து கொள்கிறார். கமலின் இந்த திடீர் மனமாற்றம் காங்கிரசார் மத்தியில் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கமலை வரவேற்றுள்ளார். கமலின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், பாராளுமன்ற தேர்தல் என்பதால் கூட்டணி தேசிய கட்சிகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பா.ஜனதாவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்று நம்புகிறார். எனவே தான் காங்கிரசுடன் கைகோர்க்க விரும்புவதாக கூறப்படுகிறது.
கொள்கை ரீதியாக பா.ஜனதாவுடன் உடன்பாடு வைத்துக்கொள்ள இயலாது என்பதால் காங்கிரசுடன் பயணிக்க முடிவுசெய்து விட்டார். கமலின் வருகை காங்கிரசுக்கு பலம் கொடுக்கும் என்று காங்கிரசும் எதிர்பார்க்கிறது.
ஒருவேளை ஹேஸ்யமாக சொல்லப்படுவது உறுதியாகிவிட்டால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் மக்கள் நீதி மய்யம் தயாராகி விட்டது. இது ஒருவகையில் காங்கிரசுக்கும் வாய்ப்புதான். ஏனெனில் தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகும் பட்சத்தில் தேவையான எண்ணிக்கையில் தி.மு.க.விடம் இருந்து சீட் பெறுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
அதை தவிர்க்கவே கமல் காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, 'ஜனநாயகத்தை விரும்புபவர் கமல். மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே தான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.