தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்பது யாரையும் மிரட்டுவதற்காக சொல்வது அல்ல- திருமாவளவன்

Published On 2024-09-15 07:09 GMT   |   Update On 2024-09-15 07:09 GMT
  • கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல்.
  • தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள்.

திருச்சி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது.

இது தொடர்பாக 2-வது 5 ஆண்டு காலத்திலும் 3-வது ஐந்தாண்டு காலத்திலும் விரிவாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலே பேசப்பட்டிருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளையும் தந்திருக்கிறது.

அந்த குழு பரிந்துரையில் மிக முக்கியமானது மதுவிலக்கு தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும், 1958-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள்ளாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க கூடாது. இதனை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். மது என்பது சமூக பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியான 69 பேரும் தலித்துகள் கிடையாது. பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். எனவே மதுவினால் எல்லா சமூகத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பாரமாக இருக்கிறார்கள். எனவே 100 சதவீத தூய நோக்கத்தோடு இந்த மது ஒழிப்பு மாநாட்டை நாங்கள் முன்னிறுத்துகிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும், மறுபடியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

1977ல் இருந்து டெல்லியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடப்பது ஒன்றும் தவறல்ல. அப்படி ஒரு கோரிக்கை எழுப்புவதும் தவறில்லை.

2016ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு புத்தகமும் வெளியிட்டு உள்ளோம். இந்த கருத்து யாருக்கும் எதிராகவும், யாரையும் மிரட்டுவதற்காகவும் சொல்லப்படுகிற கருத்தல்ல. ஜனநாயக ரீதியாக எழுப்ப வேண்டிய கோரிக்கைகள். அதிகாரமில்லாதவர்களின் குரல் இது. விளிம்பு நிலையில் கிடக்கும் மக்களின் குரல் இது.

அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகமும் கூட. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது இயல்பாக மக்களிடம் இருந்து எழும் குரலே தவிர, இது விடுதலை சிறுத்தைகள் ஏதோ திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்பது அல்ல. நாங்கள் எந்த காயையும் நகர்த்தவில்லை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது இல்லை ஜனநாயகம். அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் ஜனநாயகம். நான் அரசியலில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போதே எழுப்பிய முழக்கம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான்.

அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் இருக்க கூடாது. கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல். கூட்டணி ஆட்சி கோரிக்கை குறித்து 2026 தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News