தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு- ஹால் டிக்கெட், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2024-09-04 09:45 GMT   |   Update On 2024-09-04 09:46 GMT
  • அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும்.
  • தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II-இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscgov.in மற்றும் www.tnpscexamsin-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

1. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024 நாள் 20.06.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II.இல் (தொகுதி 11 மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது.

நேர அட்டவணை

வரவேண்டிய நேரம் - காலை 08.30 மணி

சலுகை நேரம் தேர்வு - காலை 09.00 மணி வரை

தேர்வு தொடங்கும் நேரம் - காலை 09.30 மணி

2. அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். சலுகை நேரத்திற்குப் பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

3. தேர்வர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் தேர்வர் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD)/ வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.

4. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு. முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் நிரந்தரக்கணக்கு அட்டை(PAN CARD) வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

5. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (grievancetnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்.

6. தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

7. மின்னணு சாதனங்களான அலைபேசி (Mobile Phone) மற்றும் புத்தகங்கள், குறிப்பேடுகள், கைப்பைகள், மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்றவற்றுடன் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினால், அவர்தம் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் / அவரது விடைத்தாள் செல்லாததாக்கப்படலாம் அல்லது தேர்வாணையத்தால் விதிக்கப்படும் வேறு ஏதேனும் அபாரதத்திற்கும் உள்ளாக நேரிடும்.

எனவே, தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்ட இத்தேர்வு தொடர்பான அறிவிக்கை. தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, OMR விடைத்தாள் மற்றும் வினாத் தொகுப்பு ஆகியவற்றில் உள்ள அறிவுரைகளை படித்து, தேர்வினை கவனமுடன் எழுதிட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News