தீர்ப்பு வெளியானதையொட்டி வாச்சாத்தி கிராம பெண்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- வாச்சாத்தி கிராமத்தில் உள்ள பெண்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை அறிந்த வாச்சாத்தி கிராமத்தில் உள்ள பெண்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.