தமிழ்நாடு (Tamil Nadu)

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் 2 பேர் பலி

Published On 2024-09-22 05:55 GMT   |   Update On 2024-09-22 05:55 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது.
  • விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கணேஷ், குமார் பலியானார்கள்.

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றான் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார், அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன பஸ் டிரைவரும், ஜி.பி.தொட்டே கானப்பள்ளியைச் சேர்ந்தவருமான சீனிவாசன் (வயது35) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News