தமிழ்நாடு

மைத்துனரை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை- கம்பத்தில் பரபரப்பு

Published On 2022-07-26 05:30 GMT   |   Update On 2022-07-26 05:30 GMT
  • சிவக்குமாருக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • கம்பம் நகர் தெற்கு போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் 15வது வார்டு கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளி. இவருக்கு சிவக்குமார் (வயது 25), சங்கர் (22) ஆகிய 2 மகன்களும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

சங்கீதாவுக்கு மதுரை பேரையூரைச் சேர்ந்த காளிராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி தனது மாமனார் வீட்டருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. சகோதரர்களான சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகிய 2 பேரும் டைல்ஸ் கடைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

இதில் சிவக்குமாருக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது வீட்டுக்கு வந்த காளிராஜ் தகராறை விலக்கி சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது தனது கையில் வைத்திருந்த கத்தியால் காளிராஜை எதிர்பாராதவிதமாக சங்கர் குத்தினார். இதில் படுகாயமடைந்த காளிராஜ் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கம்பம் நகர் தெற்கு போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் பயந்துபோன சங்கர் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News