தமிழ்நாடு

'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் உழைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-10-28 14:20 GMT   |   Update On 2024-10-28 14:20 GMT
  • அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
  • நமது திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "காத்திருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன்.

'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்! நமது திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்

Tags:    

Similar News