தமிழ்நாடு (Tamil Nadu)

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 2 பயணிகளிடம் ரூ.24 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2024-10-24 08:42 GMT   |   Update On 2024-10-24 08:42 GMT
  • சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

கே.கே. நகர்:

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு வந்த ஏர்இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 179 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்கசங்கிலி, தங்க துண்டு ஆகியவற்றை தனது பேன்ட் பாக்கெட்டில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 117 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்க துண்டை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பிலான 296 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவை சேர்ந்த மகேஷ் (49) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று, திரும்பியது தெரியவந்தது.

இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பேட்டிக் ஏர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த பாண்டி (46), திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகர் (53), திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, உக்கடை பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி (52)ஆகியோரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை பிடித்த அதிகாரிகள் விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News