செய்திகள்

சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் - 14 குழந்தைகள் படுகாயம்

Published On 2018-10-26 10:15 GMT   |   Update On 2018-10-26 10:15 GMT
சீனாவில் மழலையர் பள்ளி வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர், குழந்தைகளை கத்தியால் வெட்டியதில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். #kindergarten #ChinaKnifeAttack
பீஜிங்:

சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு வந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

இதனால் குழந்தைகளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வெறித்தனமாக குழந்தைகளை தாக்குவதைப் பார்த்த பாதுகாவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.



இந்த திடீர் தாக்குதலில் 14 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பள்ளிக்கு வந்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக சமுக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

சீனாவில் பொது இடங்களில் அதிகரித்து வரும்  கத்தி தாக்குதல் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #kindergarten #ChinaKnifeAttack
Tags:    

Similar News