உலகம் (World)

இலங்கையின் அடுத்த அதிபராகிறார் அனுர குமார திசநாயக- ஆட்சியை பிடிக்கும் இடதுசாரிகள்

Published On 2024-09-22 14:35 GMT   |   Update On 2024-09-22 14:54 GMT
  • விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.
  • ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார்.

இலங்கையில் அதிபராக உள்ள ரணில் விக்ரம சிங்கேவின் பதவி காலம் முடிவடைவதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

இதற்காக 13,421 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சத வீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு சீட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின் சில மணி நேரங்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன. விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.

தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் முன்னுரிமை வாக்கு என்ற முறை பின்பற்றப்படுகிறது.

ஒரே வாக்குச்சீட்டில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க வேண்டும். வாக்குச் சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார்.

இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுவார். 1-ம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

ஒரு வேளை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.

இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3-ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல் ராஜபக்சே உள்பட38 பேர் களத்தில் இருந்தனர்.

ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆனால் ஓட்டு மொத்தமாக அனுர குமார திசாநாயகே முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயகே வெற்றிப்பெற்றுள்ளார்.

Tags:    

Similar News