உலகம்

ஷேக் ஹசீனா கட்சி தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைப்பு: 24 பேர் உயிரோடு எரிந்து பலியான சோகம்

Published On 2024-08-06 12:35 GMT   |   Update On 2024-08-06 12:35 GMT
  • போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளை தீவைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
  • அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரின் சர்வதேச ஹோட்டலை தீ வைத்து எரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினர்.

போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.

இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். பல இடங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்துள்ளனர்.

அந்த வகையில் ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைத்து கொளுத்தினர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. சபீர் சர்வதேச ஹோட்டல் அவாமி லீக் கட்சியின் பொது செயலாளர் ஷஹின் சக்லாதாருக்கு சொந்தமானதாகும்.

போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகிறார்கள்.

Tags:    

Similar News