உலகம் (World)

வங்காளதேச வன்முறை: 32 பேர் பலி.. டி.வி நிலையத்துக்கு தீவைப்பு.. இணைய சேவை முடக்கம்

Published On 2024-07-19 01:47 GMT   |   Update On 2024-07-19 01:47 GMT
  • BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

 

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

பல்கலைக்கழகம் மட்டுமின்றி தலைநகர் டாக்காவிலும் மற்றைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

 

இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

 

தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

Similar News