உலகம் (World)

போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள் - இந்திய தூதரகம்

Published On 2024-09-26 09:50 GMT   |   Update On 2024-09-26 09:50 GMT
  • ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
  • லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் கோபமடைந்த இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2 நாட்களில் லெபனானில் 1,600-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் 560-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எச்சரிக்கை cons.beirut@mea.gov.in என்ற இமெயில் மூலமும், +96176860128 என்ற எண் மூலமும் இந்திய தூதரகத்துடன் இணைப்பில் இருக்கவும் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News