உலகம் (World)

லெபனான் மீது தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. மீண்டு வரும் ஹிஸ்புல்லா- அமெரிக்கா அதிருப்தி

Published On 2024-10-01 01:38 GMT   |   Update On 2024-10-01 01:38 GMT
  • லெபனானில் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்
  • எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் தெரிவிதுள்ளார்.

லெபனான் சூழல் 

லெபனானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு போர்க்கள சூழல் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவினர் மட்டுமல்லாது குழந்தைகள் பெண்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ளது. 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கியும் அண்டை நாடான சிரியாவை நோக்கியும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் அவரது மகள் ஜைனபும் கொல்லப்பட்டனர். மேலும் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர்கள் 20 பேர் இதுவரை குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளனர்.

 

தரைவழித் தாக்குதல்

இதனால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிஸ்புல்லாவினர் மீண்டு வர அவகாசம் கிடைக்காதபடி இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன் தினம் நடந்த தாக்குதலில் 109 லெபனானியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இதுவரை வான்வழியாக மட்டுமே தாக்கி வந்த இஸ்ரேல் நேற்று இரவு முதல் லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

 

கிராமங்கள் 

தெற்கு லெபனானில் எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தங்களின் காவற்படைகள் தாக்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கிடையே எல்லையில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு 

தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் தலைநகர் பெய்ரூட்டில் 6 வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்துள்ளது.

 

தயார் 

இதற்கு மத்தியில் எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசிம் [Naim Qassem] தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மறைவுக்குப் பிறகு அவ்வமைப்பு பொதுவெளியில் தோன்றி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News