உலகம் (World)

லெபனானில் 250 மீட்டர் நீள சுரங்கத்தை தகர்த்தது இஸ்ரேல்

Published On 2024-10-06 22:38 GMT   |   Update On 2024-10-06 22:38 GMT
  • லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
  • லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.

டெல் அவிவ்:

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News