உலகம்

நேபாளத்தில் 5-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பிரதமர்

Published On 2024-07-05 11:27 GMT   |   Update On 2024-07-05 11:27 GMT
  • நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் பிரதமர் பிரசந்தா.
  • பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.

காத்மாண்டு:

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

நேபாளத்தில் உள்ள உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு மே 13 அன்று பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.

இதற்கிடையே, நேபாளத்தில் 4-வது முறையாக கடந்த மே மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார் பிரதமர் பிரசந்தா. ஜூலை 12 அன்று பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரசந்தா பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News