ரஷியாவில் பிரதமர் மோடி: கிருஷ்ண பஜனை பாடி வரவேற்ற ரஷியர்கள்
- பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.
மாஸ்கோ:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார்.
மாநாட்டிற்கு இடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தபோது, அங்கு குவிந்திருந்த ரஷியர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர்.