உலகம் (World)

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்- போர் மூளும் அபாயம்

Published On 2024-10-26 02:45 GMT   |   Update On 2024-10-26 02:50 GMT
  • ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
  • ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு பதிலடியாக துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானில் உள்ள ராணுவ தளவாடகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறும்வேளையில், தெஹ்ரானுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன.

ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உள்ளிட்டவைகளுக்கு உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News