புதுச்சேரி

கோபுர கலசம் திருடப்பட்டு இருப்பதை காணலாம்

கோவில் கோபுர கலசம் திருட்டு- சி.சி.டி.வி. கேமராவை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை

Published On 2023-07-28 04:11 GMT   |   Update On 2023-07-28 04:11 GMT
  • கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
  • நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர்.

வில்லியனூர்:

புதுச்சேரி வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரி பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தநிலையில் கோவில் பூசாரி கந்தன் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழக்கமான பூஜைகளை செய்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி கந்தன் வந்தபோது, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.

இதுபற்றி கோவில் நிர்வாகி வைத்தியநாதன் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர். அதில் ஒரு பகுதி கீழே விழுந்த நிலையில் மற்ற பகுதியை திருடியுள்ளனர். மேலும் கொடிமரத்தில் இருந்த 3 சிறிய கலசங்களையும் உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.

தங்களை பற்றி அடையாளம் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோபுர கலசம் திருடப்பட்டது பற்றி அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதே கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பஞ்சலோக முருகன் சிலை திருடு போனதும் இதுதொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News