புதுச்சேரி

நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம்

Published On 2024-01-28 08:49 GMT   |   Update On 2024-01-28 08:49 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் 600 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

பட்டினச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 30-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருமலை ராஜன் ஆற்றின் முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துவிடுவதால் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களைக் கொட்டி முகத்துவாரம் தூர்ந்து போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2009-ம் ஆண்டு தொண்டு நிறுவனங்களால் கட்டித் தரப்பட்ட ஐஸ் பிளான்ட் இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் எந்திரங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீர் செய்து தர வேண்டும்.

தொடர்ந்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நீடித்து வருவதால் குடிநீருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பட்டினச்சேரி கிராமத்தில் உள்ள சிங்காரவேலர் சிலையிலிருந்து கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News