புதுச்சேரி

பிராந்திய ஏற்ற தாழ்வுகளை புதுவை அரசு போக்கியுள்ளது- துணை நிலை கவர்னர் தமிழிசை பாராட்டு

Published On 2023-03-09 07:31 GMT   |   Update On 2023-03-09 07:31 GMT
  • கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.
  • குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக இடைக்கால பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

மாநில திட்டக்குழு கூட்டத்தில் வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க கவர்னர் தமிழிசை இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார்.

அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வரவேற்பு அளித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்துக்கு கவர்னர் தமிழிசை வந்தார்.

சபாநாயகர் இருக்கையில் துணை நிலை கவர்னர் தமிழிசை அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து 9.45 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

துணை நிலை கவர்னர் தமிழிசை தமிழில் தனது உரையை பாரதியார் கவிதை வரிகளுடன் தொடங்கினார். அவரது உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:-

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் 6.83 லட்சம் கனமீட்டர் மணல் தூர்வரப்பட்டு துறைமுக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. உள்வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தடுப்புச்சுவர், பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.4.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.4.88 கோடி, மழைகோட் வழங்க ரூ.60 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் 65 குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. மாத நிதியுதவியாக ரூ.ஆயிரம் வீதம் 13 ஆயிரத்து 339 பயனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.

இந்த குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்பு ஆதரவு திட்டத்தின் கீழ் 12 குழந்தைகளுக்கு நிதியுதவியாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சிப்பரப்பை சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய செய்து வறுமையை போக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

அனைத்து பிராந்தியங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை துல்லியமாக விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்ற தாழ்வுகளை போக்கியுள்ளது.

ஆட்சிப்பரப்பில் செயல்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான ஆதரவையும், பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் நல்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இந்த அரசால் மக்களுக்காக தொடங்கப்படும் அனைத்து பணிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Tags:    

Similar News