புதுச்சேரி

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்- அமைச்சர் சொல்கிறார்

Published On 2024-07-05 05:45 GMT   |   Update On 2024-07-05 05:45 GMT
  • ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது.
  • தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்ற புதுவை பாஜக, ஆதரவு மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என கட்சி தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.

ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

அதே நேரத்தில் ஆட்சியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், 2 நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்க்கவில்லை. இதனால் புதுவை பா.ஜனதா பிளவுபட்டிருப்பது பகிரங்கமாகியுள்ளது.

இந்த நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடி கொடுத்த பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். பிரதமர் எந்த வேலை கொடுத்தாலும், சிறப்பாக செய்வோம். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளது குறித்து கட்சித்தலைவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்.

சிவப்பு ரேசன்கார்டுகள் நீக்கப்படாது. விநியோகம் செய்யப்பட்டுள்ள ரேசன்கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய முடிவெடுப்போம். தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News