டென்னிஸ்

இந்தியாவை விட்டு கைநழுவும் ஏ.டி.பி. தொடர்

Published On 2023-06-09 12:46 GMT   |   Update On 2023-06-09 12:46 GMT
  • தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏ.டி.பி. தொடர் நடத்த முடியாத என அறிவித்தது
  • 2018-ல் இருந்து மகாராஷ்டிராவில் போட்டி நடைபெற்றது

முதல்தர ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏ.டி.பி., டென்னிஸ் விளையாட்டில் ஒரு உயர்வான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது என்பது டென்னிஸ் விளையாட்டை வளரச் செய்வதுடன், அந்த போட்டியை நடத்தும் நகரத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

ஏ.டி.பி. 250 டென்னிஸ் அடுத்த ஆண்டு புனே நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இனிமேலும் இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் 1996-ல் தொடங்கி சமீப காலம் வரை, "டாடா ஒபன் மகாராஷ்டிரா" என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது.

2018-ம் வருடம் "தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன்" தங்களால் இந்த போட்டிகளை நடத்த இயலாது என தெரிவித்திருந்தபோது, இந்த வாய்ப்பு நமது நாட்டை விட்டு போகாமலிருக்க, "மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன்" இதை தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன், மகாராஷ்டிர அரசாங்கம், ஐ.எம்.ஜி., மற்றும் ரிலையன்ஸ் அகியோரின் ஒரு கூட்டு முயற்சியால் இது நடந்தது.

தற்பொழுது மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷனின் செயலர் சுந்தர் ஐயர் மற்றும் போட்டிகளுக்கான இயக்குனர் பிரஷாந்த் சுடார் ஆகியோர், ஐ.எம்.ஜி. மற்றும் ரிலையன்ஸ் (RISE Worldwide) ஆகியோருடனான தங்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் ஏற்றுக்கொண்ட தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டின் நலனுக்காகவும், இந்திய டென்னிஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காகவும் மகாராஷ்டிர அரசாங்கம் மற்றும் டாடா குழுமத்துடனும் தாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் பொறுப்போடு திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் கூறினர்.

ரபேல் நடால், கார்லோஸ் மோயா, வாரின்கா, மற்றும் மரின் சிலிக் போன்றோர்கள் பங்கேற்கும் பொழுது உலகளாவிய அளவில் இப்போட்டிக்கும், அதை நடத்தும் நாட்டிற்கும் பெருமை உண்டாகியது. ஆனால் உலகளவு பிரபலமாக தர வரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை தொடர்ந்து பங்கேற்கச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இப்போட்டியை நடத்துபவர்களால் மரின் சிலிக்கை மட்டுமே பங்கேற்க வைக்க முடிந்தது.

அதே சமயம், இந்திய வீரர்கள் ஏ.டி.பி.யின் தரவரிசையில் 1250 புள்ளிகளுக்கு 80 வரை மட்டுமே பெற முடிந்தது. அவர்களால் இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேற முடியவில்லை.

தரவரிசை பட்டியலில் ஒற்றையர் ஆட்டப்பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய ஆட்டக்காரர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் என்றளவில் 225-வது இடத்தில்தான் நாகலும், அவருக்குப் பின் 374-வது இடத்தில் முகுந்த் சசிகுமாரும் உள்ளனர்.

யூகி பாம்ப்ரி, சுமித் நகல், பிரக்யேஷ் குணேஸ்வரன் ஆகியோர் சேல்ஞ்சர்ஸ் போட்டிகளில் பங்கேற்று தரவரிசையில் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர்.

லியாண்டர் பேஸ் மற்றும் மகேஷ் பூபதி ஓய்வு பெற்றதாலும், நட்சத்திர அந்தஸ்து உள்ள வீரர்கள் பெருமளவில் பங்கேற்காததாலும் இப்போட்டியை நடத்த தேவையான பொருட்செலவும், வசதிகளும், விளம்பரதாரர்களும் கிடைக்கவில்லை. உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் பெரும் விளம்பரதாரர்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது.

தனது 5-வருட ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ. 75 கோடி மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. இதில் வெறும் ரூ.5 கோடி மட்டுமே மகாராஷ்டிர அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

ஆனாலும், இந்திய அளவில் இரட்டையர் டென்னிஸ் பிரிவு ஆட்டக்காரர்களுக்கு இந்த போட்டிகள் பயனளித்ததாக கூறலாம். தற்போதைய தலைமுறையினரில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், என். பாலாஜி, மற்றும் சக்தி மயினேனி ஆகியோர் இந்த போட்டிகளை பயன்படுத்தி தங்களின் தரவரிசையை முன்னே கொண்டு செல்லவும், பரிசுத்தொகைகளை வெல்லவும் செய்தனர்.

டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் போட்டிகளும் இந்தியாவின் கைவிட்டு செல்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவை விட்டு போகும் ஏ.டி.பி. போட்டிகளுக்கான வாய்ப்பு, அனேகமாக ஹாங்காங் நாட்டிற்கு செல்லலாம் என்று பேசப்படுகிறது.

Similar News