search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
    X

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

    • ஆஸ்திரேலிய தரப்பில் திராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    செயின்ட் லூசியா:

    9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் செயின்ட் லூசியாவில் மல்லுக்கட்டியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களம் புகுந்தனர். தொடர்ந்து சொதப்பும் கோலி இந்த போட்டியிலும் டக்-அவுட் (5 பந்து) ஆனார்.

    இதன் பின்னர் விசுவரூபம் எடுத்த ரோகித் சர்மா, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன் அந்த ஓவரில் வைடு வகையில் ஒரு ரன் என மொத்தம் 29 ரன் வந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஒரு ஓவரில் வாரி வழங்கிய அதிகபட்ச ரன் இது தான். அடுத்த ஓவரில் கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரிகளை ஓட விட்ட ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு உலகக் கோப்பையில் ஒரு வீரரின் மின்னல் வேக அரைசதம் இது தான்.

    ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஸ்டோனிசின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா துரதிர்ஷ்டவசமாக 92 ரன்களில் (41 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) மிட்செல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேவும் கைகோர்த்து ஸ்கோரை அதிகரிக்க செய்வதில் கவனம் செலுத்தினர். சூர்யகுமார் தனது பங்குக்கு 31 ரன்களும் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 28 ரன்களும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஆனாலும் கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். எப்படியோ ஹர்திக் பாண்ட்யாவும், ஜடேஜாவும் ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் மட்டையை சரமாரியாக சுழற்றியதால் ஸ்கோர் எகிறியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்களும், மேக்ஸ்வெல் 27 ரன்களும் விளாசினர். மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அவர் நின்றது வரை ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை காணப்பட்டது. 17-வது ஓவரில் ஹெட்டின் (76 ரன், 43 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) சவாலுக்கு பும்ரா முடிவு கட்டினார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

    இதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 7 விக்கெட்டுக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 24 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால் பதித்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி அதற்கு பழிதீர்க்கும் வகையில் அமைந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இது 5-வது முறையாகும். அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

    Next Story
    ×