search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    மனக்கவலை போக்கும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில்
    X

    மனக்கவலை போக்கும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில்

    • இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
    • தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. 'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இன்றைய நவீன உலகில், மனக்கவலை இல்லாதவர்கள் எவரும் இல்லை. கோடீஸ்வரர்களுக்கும் கூட மன நிம்மதி இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் துன்பம் நீக்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி, மனக்கவலையை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர்நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார்.

    இத்தல இறைவனான அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில்தான், சிவபெருமான் இத்தகைய அமைப்பில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரிய நாயகி என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், தெற்கு நோக்கி காட்சி தருகிறாா். இறைவனைப் போலவே, இத்தல அம்பாளும், பெண்களின் மன உறுதியை மேம்படச் செய்யும் சக்தி படைத்தவராக திகழ்கிறார்.

    அகத்தீஸ்வரர் கோவிலின் வலதுபுறம் வளவன்ட அய்யனார் கோவிலும், இடதுபுறம் மகா மாரியம்மன் கோவிலும் இருக்க, நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில், நந்தியம் பெருமான், ஈசன், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண யோகம் வாய்க்கும். குழந்தைச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு இத்தல இறைவன், இறைவி, நந்தியம்பெருமான் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னிதிகள் அமையப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

    தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்குவதோடு, யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும் என்கிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள், கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபம் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.

    இந்த ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால், கல்வியிலும் தொழிலிலும் மேன்மை வந்து சேரும்.

    தேய்பிறை அஷ்டமி அன்று இத்தலத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித்தனியாக 3 தீபம் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால், எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அகலும். மேலும் தீராத பகை நீங்குவதோடு, குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    இந்தக் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். தவிர தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கோடி விநாயகர், பிரகார மூர்த்திகள், பிரம்மா, துர்க்கை, சூரியன், பைரவர், நவக்கிரகங்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    இவ்வாலயத்தில் கார்த்திகை மாத சோமவார பூஜைகள், பிரதோஷம், மகா அன்னாபிஷேகம், மகா சங்காபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், தேய்பிறை அஷ்டமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, ருத்ராட்ச மாலை பந்தல் தரிசனம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி வழிபாட்டின் போது நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ருத்ரயாகம், சங்காபிஷேகம், அன்னதானம் நடைபெறும். அன்றைய தினத்தில் இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருவார்.

    ருத்ராட்ச பந்தல்

    சிவபெருமானின் கண்ணீரே, ருத்ராட்சமாக உருவானதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பந்தலை, இந்த ஆலய இறைவன் அகத்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னிதிகளில் பொருத்தியுள்ளனர். சிவ ஆலயங்களில் ருத்ராட்ச பந்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்று. ருத்ராட்ச பந்தலில் காட்சி தரும் சிவனை வழிபட்டால் பிறவி பலனை அடையலாம் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பை கொண்டுள்ள கோனூர்நாடு அகத்தீஸ்வரரை வணங்கினால் பாவங்களும், தீராத ஜென்ம தோஷங்கள் தீரும் என்கிறாா்கள்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் சென்று, கோனூர்நாடு செல்வதற்கான பஸ்களில் ஏறி கோவிலை அடையலாம்.

    -சண்முகம், தஞ்சாவூர்.

    Next Story
    ×