search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பழஞ்சிறை தேவி திருக்கோவில்- திருவனந்தபுரம்
    X

    700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பழஞ்சிறை தேவி திருக்கோவில்- திருவனந்தபுரம்

    • இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை நம்பிக்கை.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.

    அந்தன்காடு

    ஒரு காலத்தில் கேரளாவில் எங்கு பார்த்தாலும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிரம்ப பெற்றிருந்தது. அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாக கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர். உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடையவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்துக்கு மனமிறங்கிய பார்வதி தேவி, அவர் முன்பாக தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக, இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாளோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார். நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது.

    சிறைச்சாலை

    கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததை கொண்டு அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டது.

    பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் அழகு வண்ண சிற்பங்கள், கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்ப கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    கன்னியர் பூஜை

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவை தவிர மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த அம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பழஞ்சிறை அம்மனை வழிபடுபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் ஏற்படாது என்பதுடன், அவர்களுக்கு மறு பிறவி என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருமண தடை நீங்கும்

    அதேபோல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜை, பஞ்சபூத பொங்கல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற கோவில் பூசாரி தனது பாதங்களில் சிலம்பு அணிந்து கரங்களில் திரிசூலம் ஏந்தி மூவர்ண பட்டு உடுத்தி வருவார். கோவில் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கி செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்குபலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண் பானையில், கைகுத்தல் அரிசியை போட்டு, தண்ணீர் விட்டு நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குலவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும் வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது.

    இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு பஞ்சபூத பொங்கல் என்று பெயர். நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும். இத்தலத்தில் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

    அமைவிடம் :

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.

    Next Story
    ×