search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்
    X

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்

    • படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் இலவசப் பயண அட்டையை ரத்து செய்யலாம்.
    • மாணவர்களுக்கு இலவச பயண சலுகை கொடுப்பது பாராட்டுக்குரியது.

    படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகம் பஸ்களில் இடம்பெற்று இருக்கும். ஏதோ கடமைக்கு எழுதப்பட்ட வாசகம் அல்ல அது. எச்சரிக்கை விடுக்கும் அந்த வாசகத்தை, இளைஞர்கள் எளிதாக எடுத்துக் கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது. இளம் கன்றுகள் பயம் அறியாது என்பது என்னவோ உண்மைதான். அதிலும் படித்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு பிள்ளைகளாக நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனை.

    சென்னையை பொறுத்தவரையில், மாநகர பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்களை நித்தமும் காண முடியும்.

    ஒருபுறம் பஸ் பற்றாக்குறையால் இப்படி அவர்கள் செல்வதாகக் கூறினாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வழக்கத்தைதான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சில மாணவர்கள் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு காலை தரையில் தேய்த்து 'ஸ்கேட்டிங்' செய்யும் விபரீத விளையாட்டையும் மேற்கொள்கின்றனர்.

    சாகச பயணம்

    படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால்தான், அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? கதாநாயகன் என்ற மிதப்பில் இவ்வாறு சாகசப் பயணம் செய்கின்றனர்.

    அவர்களின் அத்துமீறல்கள் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும்கூட அச்சப்படச் செய்கின்றன.

    அதுமட்டுமா? குழுவாக சேர்ந்து பாடுவது, தாளம் போடுவது, பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போடுவது போன்ற பொறுப்பற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதில் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர், கண்டக்டரின் நிலைதான் பரிதாபம். 'இவர்களிடத்தில் வாக்கப்பட்டு நாங்கள் படும் கஷ்டத்தை என்ன சொல்வது?' என்பதே அவர்களின் வேதனையாக வெளிப்படுகிறது.

    பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அவர்களின் போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? அவர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்பன பற்றி ஆசிரியர்கள், கல்வியாளர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தண்டனை

    பள்ளி ஆசிரியர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், 'இலவச பஸ் பயண அட்டை அரசு வழங்குகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பிரதான பொது போக்குவரத்தாக மாநகர பஸ் இருந்து வருகிறது. சேவைகள் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க முடியாததுதான். ஆனால் அது ஆபத்தான ஒன்று. டிரைவரோ, கண்டக்டரோ, பொது மக்களோ கண்டிக்க முடியாது. போலீசார் அல்லது பள்ளிக்கூட நிர்வாகமோ, போக்குவரத்து கழகங்களோ இவர்களை தடுக்கலாம். தவிர்க்க முடியாமல் பயணிப்பவர்களைத் தவிர, வேண்டுமென்றே படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் இலவசப் பயண அட்டையை ரத்து செய்யலாம். பள்ளிகளில் போலீசார் இது பற்றிய விழிப்புணர்வை நேரடியாக வந்து ஏற்படுத்தலாம். அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்காத வகையில் தண்டனைகளை வழங்கலாம்' என்றார்.

    கூடுதல் பஸ் வசதி

    பஸ் டிரைவர் அசோகன் கூறும்போது, 'நான் 30 ஆண்டுகளாக டிரைவராக இருக்கிறேன். தற்போது சென்னையில் 6 ஆயிரம் பஸ் சேவைகள் வழங்க 'பெர்மிட்' இருக்கிறது. ஆனால் 2 ஆயிரத்துக்கும் குறைவான சேவைகளே வழங்கப்படுகிறது. இதுவும் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம். இதனால் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்கள். என் பணிக் காலத்தில் எவ்வளவோ மாணவர்களைப் பார்த்துவிட்டேன். அவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வரும்போது, அதட்டி உள்ளே வரச்சொல்லுவேன். அவர்கள் இவ்வாறு செய்வதால், அவர்களைத் தண்டிக்கக்கூடாது. அவர்களை சரிசெய்யவேண்டும். இது எங்களால் முடியாது. பள்ளி, கல்லூரி, குடும்பம், போலீசார் இணைந்து செய்தால் சரிசெய்ய முடியும். இவ்வாறு செய்யும் மாணவர்களை பிடித்து, உட்கார வைத்து பேசி, முழுமையான தீர்வுக்கு வரவேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும், அரசும் பொது மக்களின் வசதிக்காக கூடுதல் பஸ் வசதிகளை வழங்க வேண்டும்' என்றார்.

    இலவச பயண அட்டை ரத்து

    கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், 'மாணவர்களுக்கு இலவச பயண சலுகை கொடுப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதனை பெற்றுக்கொண்டு படிக்கட்டில் தேவையில்லாமல் தொங்கியபடி செல்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான இலவச பயண அட்டையை ரத்து செய்ய வேண்டும். படிக்கட்டில் பயணம் செய்ய பஸ் டிரைவர், கண்டக்டர் அனுமதிக்கக்கூடாது. பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக பஸ் சேவைகளை வழங்கலாம். அவ்வாறு செய்தால், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். பஸ் படிக்கட்டு பயணம் குறித்த வாசகங்களை பஸ்களில் பெரிய அளவில் இடம்பெறச் செய்யவேண்டும். மற்ற விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இது அவசியமானது. சமூக வலைதளங்களில் இதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் செய்தால், படிக்கட்டு பயணம் குறையும்' என்றார்.

    கண்டிப்பது சிறந்த வழி

    கல்லூரி பேராசிரியை ஜெயந்தி கூறும்போது, 'கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் குழுவாக சேரும்போதுதான் அவர்கள் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். தன்மீது கவன ஈர்ப்பு வர வேண்டும் என்று நினைத்து இதுபோன்ற வீரசெயல்களை செய்கிறார்கள். இது அவர்களை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்கள் படிக்கும் கல்லூரி, அவர்களின் பெற்றோரையும் மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்கிறது. நாளைய சமுதாயமாக பார்க்கும் கல்லூரி மாணவர்கள், இந்த செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. படிக்கட்டில் தொங்குவது மட்டுமல்லாமல், பாடல், தாளம் என்ற பெயரில் மற்ற பயணிகளையும் துன்புறுத்துவது சரியாக இல்லை. பொழுதுபோக்கு என்பது மற்றவர்களை துன்புறுத்தாத வகையில் இருப்பதுதான் நல்லது. அளவுக்கு அதிகமாக செல்லும் எந்த செயல்களையும் கண்டிப்பதுதான் சிறந்த வழி. துறை சார்ந்த அதிகாரிகள் கண்டிப்பை கடினமாக்க வேண்டும். தேவையான விழிப்புணர்வு, ஆலோசனையும் அவர்களுக்கு வழங்குவது காலத்தின் கட்டாயம்' என்றார்.

    Next Story
    ×