search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    71 வயது மூதாட்டியின் வாயை டேப்பால் சுற்றி 10 பவுன் செயின் பறிப்பு
    X

    71 வயது மூதாட்டியின் வாயை டேப்பால் சுற்றி 10 பவுன் செயின் பறிப்பு

    • சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கொண்டசாமி வீதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கல்யாணி (வயது 71). இவரது தனது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவரது மகன் குமார் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மதியம் கல்யாணி தனது வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் தான் கொண்டு வந்த செலோ டேப்பை எடுத்து மூதாட்டியின் வாயில் சுத்தினார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் செயினை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×