search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை மாநகராட்சி 41-வது வார்டில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு
    X

    கோவை மாநகராட்சி 41-வது வார்டில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு

    • தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
    • கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றினர்.

    கோவை

    கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41-வது வார்டுக்குட்பட்ட பி.என்.புதூர், வீராசாமி காலனியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடுகள், பிறப்பு இறப்பு பதிவேடு, புகார் பதிவேடுகளை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து, பி.என்.புதூர், வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும் பார்வையிட்டார்.

    மேலும் தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலஅளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வானை தமிழ்மறை, உதவி கமிஷனர் சேகர், உதவி செயற்பொறியாளர் தஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் திரு.ரவிக்கண்ணன், திரு.முரளிதரன், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

    Next Story
    ×