search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
    • யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.

    நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-

    யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.

    இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.

    இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
    • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மரப்பட்டடைகள், பழங்கள், உள்ளிட்டவை மூலம் சாராயம் தயாரிக்கப்படுவதில்லை. முழுக்க, முழுக்க ரசாயனங்களை கொண்டு தான் சாராயம் தயாரிக்கப்படுகிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கும், அதை அழிப்பது குறித்தும் தீர்வு காண வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.


    நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களது உறவினர்களுக்கு தான் பணம் கொடுக்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் நிராதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு தான் நிவாரணம் வழங்கி வருகிறோம்.

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. ஆனால் கள்ளுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே.

    கள்ளுக்கடைகளுக்கு என தனி லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதில் தனி கவனம் செலுத்தப்பட்டு முறைப்படுத்தினால் மதுவிலக்கு சாத்தியம் தான்.

    கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை பீகார் மாநிலம் நிரூபித்து காட்டியுள்ளது. கேரள அரசு அதற்கான முயற்சியில் உள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
    • வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    கோவை:

    கள்ளக்குறிச்சி மாவட்ம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலாவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிகளவில் சேர்த்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    எனவே இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    • இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.

    வடவள்ளி:

    உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களையும் செய்தார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஆசனங்களை செய்தனர்.

    அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா என்பது ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்க செய்தார். உலக நாடுகள் அனைத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ளுங்கள்.

    கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.

    மனதிற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கும் யோகாவை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
    • விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.

    ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

    மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

    அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.

    இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    • வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான வெயில் காணப்பட்டது.

    மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழைக்கு வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக, வால்பாறையில் உள்ள ஆறுகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டி தீர்த்த கனமழையால் வால்பாறை பகுதியில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. மழை பெய்ததால் கடும் குளிரும் காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
    • 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.

    நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ந் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22, 23, 24 கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி திறக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
    • சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.

    கோவை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.

    இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.

    சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.

    அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.

    அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.

    அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?

    அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.
    • பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார்.

    கோவை:

    வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார். கூட்டணி இல்லாமல் அவர் அதிகமான வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இதற்காக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்களின் நலனுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட கூடுதலாக பணியாற்றுவார்.

    கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் பேசியவர்கள் தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஆட்சியை பிடிப்பதாக கனவு கண்டு வருகின்றனர். நாங்கள் 40 இடத்தை பிடித்து விட்டோம், பாராளுமன்றத்தில் பாருங்கள் என கூறுவதால் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது தென்னிந்தியாவில் ஏற்கனவே காலை பதித்து விட்டோம் தமிழகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார். ஆனால் தமிழக அரசின் மின் கட்டண, பத்திரப்பதிவு உள்ளிட்ட விலை உயர்வால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். இனி சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வியூகங்களை வகுத்து பணிகளை தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அத்துமீறல்.
    • மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈஷா சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, காவல்துறையினரும், கிராம மக்களும் குண்டர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஈஷா சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். 

    அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.

    இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

    ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார்.

    மேலும், இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை கேட்டுள்ளது.

    இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
    • மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார்.

    நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி.

    40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர்.

    திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.

    மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று சொன்னார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை தலைகுனிய வைத்துள்ளோம்.

    இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி.

    வாயால் வடை சுடுவதெல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருத்துகளால் சுடுவார்கள். 237 எம்பிக்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவால் நினைத்ததை செய்ய முடியாது. மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

    நாடாளுமன்றத்தில் 9695 கேள்விகளை எழுப்பியவர்கள் எங்கள் எம்பிக்கள்.

    நாடாளுமன்றத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 40 எம்பிக்கள் செயல்பட வேண்டும்.

    பாஜகவை பாசிசி பாதையில் செல்ல விடாமல் எம்பிக்கள் தடுக்க வேண்டும். எப்போதும் கட்சி பற்றியே சிந்தித்த தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா பரிசே இந்த 40க்கு 40.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், திமுக வேட்பாளர் தான் வெற்றி பெற போகிறார். தொடர் வெற்றி, இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது.

    எங்களை நம்பி பொறுப்பு கொடுத்துள்ள மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
    • கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. 

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.

    கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

    ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.

    2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.

    மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×