search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    • சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    சங்கராபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான பாதூர் கிராம எல்லையில் சேஷ நதியின் குறுக்கே 2 தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றிச் செல்ல ஏதுவாகவும், குறிப்பாக செங்குறிச்சி, மதியனூர், நைனாகுப்பம், வண்டிப்பாளையம், பாதூர், டி.ஒரத்தூர், சின்னக்குப்பம் ஆகிய கிராமங்களின் விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிகளுடன் பச்சை நிறத்துண்டு அணிந்து 3 கி.மீ. தொலைவிற்கு வயல்வெளியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு தலைவரின் விவசாய நிலத்தில் சந்தனமரம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்திக்குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
    • குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    கள்ளக்குறிச்சி:

    குறை பிரசவம் அல்லது உடல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை வைத்து பாதுகாப்பதற்காக தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. அதாவது பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இதில் குழந்தையின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.

    ஆனால் அந்த இன்குபேட்டர் எந்திரத்தின் கருவியின் 4 புறத்திலும் இரும்பில் ஆன கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளிக்கொண்டு செல்வதற்காக சக்கரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்தில் சக்கரம் இல்லாததால், அந்த எந்திரத்திற்கு 2 கல் வைத்து முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் மருத்துவக்கல்லூரி பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியாக செயல்படுவதாகவும், அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கிடையே இன்குபேட்டரில் ஒரு குழந்தை வைத்திருக்கும் நிலையில், அதை தாங்கி நிற்கும் கம்பியில் ஒரு பகுதியில் மட்டும் கல் வைத்து முட்டுக்கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் வந்த பயணி ஒருவர் அவரது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஆனந்தன் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் கிடந்தது. இதைப் பார்த்த அவர் உடனே வெளியே வந்து அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்துள்ளார். அங்கிருந்த யாரும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

    பணத்தின் உரிமையாளர் யார் என்றும் தெரியவில்லை. இதனால் ஆனந்தன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்காவில் உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி ஜெயா (40), அந்தப் பகுதியில் மகளிர் சுய உதவி குழு ஒன்றின் தலைவியாக இருந்தார்.

    இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் உதவி பெற சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கையொப்பமிட ஜெயா அழைக்கப்பட்டார். இதற்காக தனது கணவர் மற்றும் 2 மகள்களான வசந்தி (18), வைதேகி (14) ஆகியோருடன் நேற்று இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை ஜெயாவின் கணவர் அழகுராசு ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ எதிரில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் ராமேஸ்வரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ், காரின் மீது அதிவேகமாக மோதி சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயா மற்றும் அவரது மூத்த மகள் வசந்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அழகுராசு, மற்றொரு மகள் வைதேகி மற்றும் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த எடக்கல் போலீசார், அந்த பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று பணிமுடித்து புதுத் துணிகளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    இவர் செங்குறிச்சி சாலை யில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற கார் பெட்ரோல் பங்கிற்கு செல்ல திடீரென திரும்பி யது. பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.தகவல் அறிந்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.கூட்ரோட்டில் மினி லாரி ஒன்று இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூருக்கு இன்று அதிகாலை சென்றது.

    இந்த மினிலாரியை வரஞ்சரம் அருகேயுள்ள இய்யனூர் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 47) ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (40), மருதை (28) ஆகியோரும் வந்தனர்.

    மினிலாரி சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணப்புரம் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த போது, வேளாங்கண்ணியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்ற தனியார் சொகுசு பஸ் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. சொகுசு பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.

    பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியின் டிரைவர் குமார், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தனர். மேலும், அதிலிருந்த மருதை படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்தார்.

    மேலும், சொகுசு பஸ்சின் டிரைவர் நாகை மாவட்டம் அரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த ஜெயசீலன் (33), பெங்களூருவை சேர்ந்த பானு (48), தேவி (68), அருண் (8), சரண் (5) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தினால் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி.செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    அவர் இன்று காலை வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு பெரி.செந்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பெரி.செந்தில் வீட்டிற்கு வருவதும், பெட்ரோல் நிரப்பபட்ட பாட்டிலில் தீயை வைத்து வீட்டின் வாசலில் வீசி விட்டு அங்கிருந்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த பதிவை கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடம் பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பான கூட்டம் உளுந்தூர்பேட்டை தாசில்தார் தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபாவின் பொதுச்செயலாளர் பெரி.செந்தில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கு வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களில் யாரேனும் பெரி.செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
    • மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா (வயது 23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி அருண் பிரசாத் பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டிற்கு செல்லாமல் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாணவி சோகத்துடன் இருப்பதை பார்த்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் ஆரூர் கிராமத்தில் உள்ள அருண் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாணவியன் உறவினர்கள் வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவியின் உறவினர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த அருண் பிரசாத் தப்பிவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அருண் பிரசாத்தை அவரது தொலைபேசி எண்ணின் மூலம் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் குளத்தூர் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சில் அருண் பிரசாத் வந்திறங்கினார். உடனே அருண் பிரசாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒரிரு தினங்களில் போலீஸ் காவலில் எடுத்து அருண் பிரசாத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    ×