search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைப் லைன் பணிகள் முடிந்ததால் செட்டிகுளம்-பீச் ரோட்டில் பஸ் போக்குவரத்து தொடக்கம்
    X

    பைப் லைன் பணிகள் முடிந்ததால் செட்டிகுளம்-பீச் ரோட்டில் பஸ் போக்குவரத்து தொடக்கம்

    • தடுப்பு கற்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • சாலையை விரிவாக்கம் செய்து தொடர்ந்து இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பீச்ரோடு முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பைப்லைன் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள், பஸ் அனைத்தும் சவேரியார் ஆலயம் வழியாக மாற்றி விடப்பட்டது. கோட்டார்-சவேரியார் ஆலய சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த சாலையை விரிவாக்கம் செய்து தொடர்ந்து இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் தற்பொழுது பீச் ரோடு செட்டிகுளம் சாலையில் பணிகள் முடிவடைந்து மணல்கள் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி பகுதி வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் தற்பொழுது இந்த சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோட்டார் வழியாக வரும் சில பஸ்களும் பீச்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டது.

    இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், செட்டிகுளம்-பீச்ரோடு பகுதியில் பணிகள் முடிவடைந்து, பரீட்சார்த்த முறையில் தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. 2 நாட்களுக்கு பிறகு அந்த சாலையை சீரமைத்து தார் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி பல்வேறு சாலைகளை இருவழிப்பாதையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் ரவுண்டானா அமைக்கவும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    பீச் ரோட்டில் இருந்து செட்டிகுளத்திற்கு திரும்பும் சாலையில் சாலையின் நடுவே தடுப்பு கற்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் சாலை நடுவே உள்ள தடுப்பு கற்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×