search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செ.மீ. கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
    • 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

    நகர் பகுதியில் காலை முதல் மதியம் 2 மணி வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டமாக மாறி சாரல் மழையாக பெய்த வண்ணமாக இருந்தது.

    உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை முதல் மாலை வரை 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் கொட்டித்தீர்த்துள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புகுந்த மழைநீரின் நடுவே கட்டிலில் படுத்திருக்கும் மூதாட்டிகள்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×