search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர்.
    • தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார்.

    மதுரை:

    மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் பிராஜாப்தி (வயது 30), கியானந்த பிரதாப் கவுத் (22) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர்.

    இந்தநிலையில் மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர். இதனால், அவர்கள் புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில், மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதனையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.

    ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.

    மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.

    இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

    ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.
    • மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த தனது மகனுக்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

    திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

    கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், "சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    • டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
    • கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

    மதுரை:

    தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    இதற்கிடையே கடந்த வாரம் உள்ளூர் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பல்வேறு அமைப்புகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று கப்பலூர் டோல்கேட்டில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டோல்கேட்டை மூட வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், டாக்டர் சரவணன், மகேந்திரன், தமிழரசன், பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரின் முற்றுகை போராட்டம் காரணமாக கன்னியாகுமரி முக்கிய நெடுஞ்சாலையான கப்பலூர் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.

    தற்போது உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் 50 சதவீத கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

    எனவே டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த அரசு மக்கள் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை.

    மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் இருக்கும்பொழுது டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது.

    கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சனையில் எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அடக்குமுறைக்கு அஞ்சாமல் எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலாவின் செயல்பாட்டை வரவேற்கிறேன்.
    • மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பதற்கு அவர் யார்? என்னிடம் மன்னிப்பு கடிதம் கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமம் கிடையாது. 90 சதவீதம் தொண்டர்களை இணைத்து விட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த செயல்பாட்டை வரவேற்கிறேன்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை. அதனால் இரட்டை இலையுடன் மாங்கனி உள்ளது. மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை சரி செய்ய தவறினால் தி.மு.க. அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.எ. அய்யப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளம் மாயன் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள் (வயது 70). இவர்களுக்கு பாண்டியராஜன், பரசுராமன் என்ற 2 மகன்களும், பாண்டியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

    மகன்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். பாண்டியம்மாளை பிச்சை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து பல்கலை நகர் அருகே உள்ள ராஜம் பாடியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராசு விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராஜம்பாடியில் உள்ள தனது மகள் பாண்டியம்மாள் வீட்டில் தங்கி அவரது பராமரிப்பில் ஓய்வெடுத்து வந்தார்.

    இதற்கிடையே காசம்மாள் மட்டும் மாயன் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்துள்ளார். நேற்று இரவு காசம்மாளுக்கு தங்கராசு போன் செய்து ஏன் நீ மட்டும் அங்கு தனியாக இருக்கவேண்டும்? நீயும் மகள் பாண்டியம்மாள் வீட்டுக்கு வந்துவிட வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த காசம்மாள் விரைவில் மகள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.


    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் காசம்மாள் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வழக்கமாக அதிகாலையில் வாசல் தெளித்துவிட்டு செல்வார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் காசம்மாள் தலைக்குப்புற பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக அவர்கள் இதுபற்றி அவரது கணவர் தங்கராசுவுக்கும், சிந்துப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். இதில் காசம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விரசாரணையை தீவிரப்படுத்தினர். மோப்ப நாய் சார்லி வரவழைக்கப்பட் டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் காசம்மாள் கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க தாலிச்சங்கிலி, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் உள்பட 65 பவுன் நகைகளை 'மர்ம' நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்க வந்த கும்பல் காசம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மோப்ப நாய் சார்லி அந்தப் பகுதியில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணையானது உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பல தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இது தனியார் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து அறிந்தபின் நிரந்தர தீர்வு காணலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தொழிலாளர்களை தோட்டத்திலிருந்து காலி செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.
    • கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி அறியாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அன்னை மீனாட்சி அருள்பாலிக்கும் ஆன்மீக ஸ்தலமாகவும், தமிழர்களின் கலையை பறைசாற்றும் வானுயர்ந்த கோபுரங்களும், ஆச்சரியம் அளிக்கும் சிற்பங்களும் கொண்டதாக இக்கோவில் பெருமையுடன் விளங்கி வருகிறது.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் தரிசிக்க இன்று எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்த பல சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த சமூகத்தினர் மீனாட்சி அம்மன் கோவில் கோபுர நுழைவாயில் முன்பு சூடம் ஏற்றி வெளியே நின்றுவாறு சாமி கும்பிட்டு செல்லும் நிலை இருந்தது. அனைவருக்கும் சமமான கடவுளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபடுவதற்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1938-ம் ஆண்டு வரை மீனாட்சி அம்மன் கோவிலில் மற்ற சமூகத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    1939-ம் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்திருந்த வேளையில் மதுரையிலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து சுதந்திரத்திற்காக வீதிக்கு வந்து போராடி வந்த அந்த வேளையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல மட்டும் பாகுபாடு காட்டுவது உறுத்தலாகவே இருந்தது.

    சுதந்திரம் அடைவதற்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் நிலவும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.

    சுதந்திரப் போராட்ட தியாகி, வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட இவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நடைபெறும் சமூக தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.

    இதையடுத்து அவர் முத்துராமலிங்க தேவர், என்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலய பிரவேசம் குறித்து எடுத்துக் கூறினார். இதற்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது. வைத்தியநாத அய்யர் நடத்தும் ஆலய பிரவேசத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

    கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார். கோவில் பட்டர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆலய பிரதேசத்துக்கு ஆதரவு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து 1939-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி இரவு 8 மணி அளவில் வைத்தியநாத அய்யர் தலைமையில் கக்கன், (முன்னாள் அமைச்சர்) முருகானந்தம், சின்னையா, பூவலிங்கம், சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று கருவறையில் அம்மனை வழிபட்டனர். சாமி கும்பிட்டு வெளியே வந்த வைத்தியநாத அய்யர் பொதுமக்கள் மத்தியில் ஆலய பிரவேசம் நடைபெற்றதாக அறிவித்தார்.

    இந்த தகவல் மதுரை முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து சமுதாய மக்களும் சென்று சாமி கும்பிட்டனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் நடந்து இன்றுடன் 85 ஆண்டு கள் நிறைவடைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. அதற்கு பலர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி போராட்டங்களை நடத்தி உரிமையை மீட்டெடுத்துள்ளனர். இதற்கு சாட்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களும் பெருமையுடன் கம்பீரமாக வானுயர்ந்து நிற்கிறது என்றால் மிகையாகாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
    • துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.

    அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது. 

    • அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது.
    • அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை.

    டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா? இல்லையா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

    அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார் அண்ணாமலை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

    பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும். இது சத்தியம்.

    அண்ணாமலை அல்ல, எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். நாவடக்கம் இல்லாத அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்தும் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார்.
    • சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    மதுரை:

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். இங்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். தற்போது இந்த அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் கட்டிடங்கள் மற்றும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில் தலைக் காயம், விபத்து சிகிச்சை, உயிர் காக்கும் பிரிவு என்று அண்ணா பஸ் நிலைய பகுதியில் பிரமாண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இங்கும் தினசரி 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான காட்டுமாரி (வயது 58) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது மார்பு, கால் மற்றும் மணிக்கட்டுகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரது மகன் வெளியூரில் இருப்பதால் காட்டுமாரி தனியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வலதுகாலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் வராண்டா பகுதியில் காட்டுமாரி சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரி பணியாளர்கள் காட்டுமாரியை அடிக்கடி வந்து எச்சரித்ததுடன், தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் காட்டுமாரி தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுநீர், இயற்கை உபாதைகளை கழித்ததால் ஆத்திரமடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றி அருகே உள்ள பஸ் நிலைய பிளாட் பாரத்தில் கொண்டு விட்டதாக தெரிகிறது.

    இதனால் நடக்க வழி இல்லாமல் சாலை ஓரத்திலேயே காட்டுமாரி முடங்கினார். இந்த நிலையில் சாலை ஓரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் காட்டுமாரியின் முனகல் சத்தம் கேட்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சாலையோர பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் நோயாளி குறித்து தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு வந்த தொண்டு நிறுவனத்தினர் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த காட்டுமாரியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தர்மராஜ் கூறியதாவது:-

    முதியவர் காட்டுமாரி தொடர்பான மதுரை மருத்துவமனை ஆவணங்களில் கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    நோயாளியை வெளியேற்றியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ரோட்டில் மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
    • மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.

    கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    ×