search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    மதுரை:

    சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கிபட்டுடுத்தி நேற்று தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

    மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்றனர். மதுரையில் மூன்று மாவடியில் இன்று காலை 6  மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபா ராதனை காட்டியும் அழ கரை மதுரை மக்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவ ருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    நாளை காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார்.

    பின்னர் சித்ரா பவுர் ணமி தினத்தன்று முக்கிய நிகழ் வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதற்காக லட்சக்க ணக்கான பக்தர்கள் மதுரையில் இப்போதே குவியத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளை யும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மேற் கொண்டு வருகிறது.

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது.

    மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநா ளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்ம னுக்கு மங்கலநாண் அணி விக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

    அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

     தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி-அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

     தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீ சார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொண்டனர்.

    திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்ப டுத்தினர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத் தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (22-ந்தேதி) உச்சிகங காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    • மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
    • வைகையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக, நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக இன்று மாலையில் அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

    பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம்.

    இதேபோல், வைகைக் கரையில் தவம் செய்துகொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக அழகர், மதுரைக்கு வந்து வைகையில் இறங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அழகர் எந்த நிறத்தில் பட்டுப்புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதி இருக்காது. மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். எனவே, அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வரப்போகிறார்? என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.

    • சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
    • கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.

    சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.

    10 டன் எடையில் வண்ண மலர்கள்

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்

    சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.

    5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

    • காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). இவர் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வருவது வழக்கம். உள்ளூரிலும் பல்வேறு வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கீழவளவு பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர் ஒருவரின் காரில் நவீன்குமார் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் என்பதால் அருகில் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணன் என்பவர் தனது ஆட்டோவுடன் நின்றிருந்தார். நவீன்குமார் அமர்ந்திருந்த கார், பஸ் நிறுத்தம் அருகே உள்ள சத்தியமூர்த்தி (40) என்பவரின் ஜெராக்ஸ் கடை முன்பாக நின்றிருந்தது.

    இரவு 9 மணி என்பதால் கடையை அடைக்கும் பணியில் சத்தியமூர்த்தி ஈடுபட்ட படி கடை வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நவீன்குமார் அமர்ந்திருந்த கார் அருகே வந்து நிறுத்தப்பட்டது. அந்த காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீன் குமாரை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது.

    இதை சற்றும் எதிர்பாராத நவீன்குமார் நிலை தடுமாறினார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. இந்த சம்பவத்தில் நவீன்குமார் படுகாயமடைந்தார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் அருகில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணனும் காயமடைந்தார்.

    அதேபோல் ஜெராக்ஸ் கடை வாசலில் நின்றிருந்த உரிமையாளர் சத்திய மூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். சிலர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் கூடினர். இதற்கிடையே டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசிய கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்ல செய்தனர். காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் கண்ணன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் பணியாற்றியபோது நவீன்குமாருக்கு மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகை காரணமாக நவீன்குமாரை கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டை கும்பல் வீசி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிறுத்தம் அருகே சினிமா பாணியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் கீழவளவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரையில் அரசாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப் பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப, நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன் றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது.

    சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

    கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ.30 லட்சம் செலவில், 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல் யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.

    அதன் பின்னர் திருக்கல் யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.

    மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபர ணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.

    திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல் யாண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

     இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக் குள் ரிஷப லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மீனாட்சி அம்மனாக ஹாலாஸ்யநாதன் பட்டரும், சுந்தரேசுவரராக செந்தில் நாதன் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த செந்தில் நாதன் பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

     அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித் திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.

    சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல் யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாத கன்னிகைகள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண இந்த ஆண்டும் பல்லாயிரக்கானோர் திரண்டிருந்தனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

     திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கூட்டமாகவே காட்சி அளித்தது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து அளிக்கப் பட்டது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதி சென்றனர். திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, தெப்பக் குளம் மாரியம்மன் கோவில், காமராஜர் சாலை சவுராஷ் டிரா பள்ளி, பழைய குயவர்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர் 70 அடி சாலை, அரசரடி இறையியற் கல்லூரி வளாகம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

    சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள். நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

    • குண்டுவீச்சில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் இன்று அதிகாலை நவீன்குமார் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டுவீசப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார். அவரின் அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவரும் காயமடைந்தார்.

    குண்டுவீச்சில் கையில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
    • தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மதுரையில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. மதுரையை பொருத்தவரையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் லீலா (வயது 99). இவரது 2 மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது மற்றொரு மகள் வீடு தவிட்டுசந்தை பகுதியில் உள்ளது. இவர் அப்பகுதியில் மகளுடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கான வாக்குச்சாவடி கே.கே.நகர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்களுக்கான உரிமைக்கு விண்ணப்பிக்க காலம் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்பினார். 99 வயதான இவர் நடக்க முடியாத முதுமையான நிலையில் காணப்பட்டதால் வாக்களிக்க உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இவரது கோரிக்கையை ஏற்று மூதாட்டி லீலா ஆம்புலன்சில் சென்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பேரில் ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு தவிட்டுசந்தையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் இருந்து மூதாட்டியை வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு ஆம்புலன்சு மூலம் தன்னார்வலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 99 வயது மூதாட்டி லீலா தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு அமைச்சர் உதவிய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.

    அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.

    இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×