search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • வயதான பெற்றோரை முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
    • நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள் ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் கோர்ட் டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அங்கிட் திவாரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வாரம் தோறும் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. இது உடல் மற்றும் மனரீதியாக அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அதிக செலவையும் ஏற்படுத்துவதாக உள்ளது. வயதான பெற்றோரையும் முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.

    வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிட் திவாரிக்கு நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவார். எனவே நிபந்தனையை தளர்த்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வாரம் ஒரு முறை திங்கட்கிழமை கையெழுத்திடுவதை 2 வாரத்திற்கு ஒருமுறை திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

    • மதுரை எய்ம்ஸ் தொடர்பான பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
    • மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..?" என்று ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது.

    கொரோனா 2022-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
    • நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.

    மதுரை:

    மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தற்போது பெண்கள் அதிக அளவில் படித்து முன்னேறுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களாக பெண்களே இருப்பார்கள்.

    அந்த அளவுக்கு பெண்கள், மாணவிகள் அதிகமாக படிப்பின் மீது கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்கள் என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 4,000 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. வணிக வரித்துறையில் இந்த ஆண்டு இலக்காக ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு 23 ஆயிரம் கோடி என்று வைத்திருக்கிறோம். எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.

    நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். மேலும் கல்விக்கடனை வங்கிகள் அதிகமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். வெகு விரைவில் எதிர்பாருங்கள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார். வருகின்ற செப்டம்பர் 9-ந்தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
    • கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

    இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.

    எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார்.
    • நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ். இவரது மனைவி அபிநயா. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

    அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேசிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தற்போது வரை நகையை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
    • தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
    • பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்.

    தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதேபோல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் கவால்துறை அதிகாரி காதர் பாட்சாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளார்.

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா ? அதற்கான ஆவணங்கள் உள்ளதா ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    • தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
    • தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-

    தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

    என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.

    மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
    • எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரையூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது

    இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசியதாவது:-

    அமெரிக்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போவதனால் கவலையில்லை. அவர் போவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா என்பதுதான் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அதன் மூலமாக வேலை வாய்ப்பு வந்துவிட்டது, முதலீடு வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் எல்லாம் பெருகிவிட்டதாக கூறுகிறார்கள்.

    ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். முதல்வர் என்று சொன்னால் மக்களோடு தான் இருக்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்களை வெளிநாட்டுக்கு வரச்சொல்லி அங்கே இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் முதலீடு கிடைத்தது என்று இரண்டு பேரும் சொல்வார்கள் .

    இங்கே தானே இருந்தீர்கள் இங்கே முடித்து இருந்தால் அரசிற்கு செலவாவது மிச்சமாய் இருக்கும் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
    • அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.

    பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இருக்கிறது.

    இந்தநிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேசுவரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

    அதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை 5-வது நாட்களாக தொடர்வதால் ரூ.8 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமலும், 5 நாட்கள் ஆன நிலையில் வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி, பாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

     

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.

    சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.

    ×