search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தென்காசி:

    தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலம் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் அதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்திலும் அவ்வப்போது சாரல் மழை ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

    இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மற்றும் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.

    குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு அரிய வகை பழங்கள் குற்றாலம் அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் பொழுதை கழித்து மகிழ்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை அதிகரிக்கும்பட்சத்தில் தண்ணீர் வரத்தும் அதிகரிக்க கூடும். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்து விட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    சென்னை ஆவடி அருகே அன்னனூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 65). இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன்(29).

    அதே பகுதியில் வசந்தம் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர்கள் தங்கராஜன்(35), அவரது மனைவி பூங்கொடி(30), மகன்கள் வெற்றிச்செல்வன்(7), மோகித்தம்(5), வெங்கடேசன் மனைவி சசிகலா (48), அவரது மகள் காவியா (24) ஆகிய 6 பேரும் மாதவன், அவரது தாயார் ஹேமலதாவுடன் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்கள் 8 பேரும் ஒரே காரில் வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்துவிட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரத்தில் தென்காசி- ராஜபாளையம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தவிடு ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி கத்தி கூச்சலிட்டனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மற்றொரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் பாஸ்கர் என்ற பாஸ்கரன் (வயது 36). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க செல்ல முடிவு செய்தார். அவர் தனது நண்பர்களான விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த மாரிமுத்து (33), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த கிருஷ்ணராஜா (35) ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு காரில் குற்றாலத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கு குளித்து முடித்து விட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் 3 பேரும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். காரை கிருஷ்ணராஜா ஓட்டி வந்தார்.

    புளியங்குடியை அடுத்த நவாச்சாலை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தின் மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கிருஷ்ணராஜா, ராணுவ வீரரான பாஸ்கர் ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது நண்பரான மாரிமுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரி

    சோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த மாரிமுத்துக்கு தென்காசி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது.

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலையில் தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பழைய குற்றால அருவிக்கு செல்லும் வாக னங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளதாக பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோக்களை இயக்கி வரும் ஓட்டுனர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.

    அதில் தங்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டுமானால் பழைய குற்றால அருவிக்கரை வரையில் ஆட்டோக்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் ஏனெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரத்தில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து நடந்து செல்லும் பொழுது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் அதனை தடுக்கும் வகை யில் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளனர்.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தடையானது நேற்று முழுவதும் நீடித்தது. இந்நிலையில் இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரண மாக ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    இன்று காலையில் ஐந்தரு வியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர்.

    காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

    மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றால சீசன் களைகட்டும்.

    ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் போதுமான அளவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும்.

    • தென்காசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போஸ்டர்களில், கழகத்தை காக்க வாருங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்களே.

    தென்காசி:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அக்கட்சியை வழிநடத்த சசிகலா வரவேண்டும் என கோரி பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த போஸ்டர்களில், கழகத்தை காக்க வாருங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்களே. போதும், போதும் இந்த பொறுமை போதும்.

    கழக உறுப்பினர்களையும் கழகத்தை நிலைநாட்டி கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து உயிர்பிக்கவும் தங்களது பாணியில் மீண்டும் கழகத்தை வழிநடத்தவும் தலைமை ஏற்கவும் வாருங்கள் வாருங்கள்.

    தாயே புரட்சித்தாய் சின்னம்மா அவர்களே சிங்க பெண்ணாய் வாருங்கள் என்ற வாசகத்துடன் கழக வழக்கறிஞர் அணியினர் சார்பில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

    • தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ளன.
    • டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

    இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் தோல்வியையே சந்தித்தார்.

    எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று முழுவீச்சில் களப்பணியாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை.

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ள நிலையில், இந்த தேர்தலில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 976 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது 67.72 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்க தொடங்கினார். அவர் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கடைசி சுற்று வரையிலும் முதல் இடத்திலேயே நீடித்தார்.

    டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    முடிவில் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்றார். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 3 லட்சத்து 55 ஆயிரத்து 870 ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாரல் மழையும் பெய்து ‘குளு குளு’ சீசன் நிலவுகிறது.
    • தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

    இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது .

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலி கருவியை பயன்படுத்தி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.

    இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க தொடங்கினர்.

    இன்று காலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வமுடன் குளித்தனர்.அருவிகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு பகுதி, பகுதியாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அருவிக்கரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மெயின் அருவி கரையில் ஆண்கள் குளிக்க செல்லும் பகுதியில் தரைத்தளம் சீரமைக்கப்படும் பணிகள் காரணமாக அந்த வழியே யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் அந்த வழியே மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்ப தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • போலீஸ் ஏட்டுக்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ்(வயது 26), பெர்லின்(24), கஜேந்திரா(22) மற்றும் மரியசுந்தரம் மகன் நவீன்(27) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா சிக்கியது.

    தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வாலிபர்கள் 4 பேரையும் இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    இந்நிலையில் கைதான மகேஷ், பெர்லின், கஜேந்திரா ஆகியோரின் சகோதரரான கல்யாணசுந்தரம் நேற்று மதியம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பறிமுதல் செய்த ரூ.2 லட்சத்தை திருப்பி தருமாறு கூறி தகராறு செய்ததாகவும், தொடர்ந்து போலீசாரை வெட்டிவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் போலீஸ் ஏட்டுக்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஏட்டுக்களிடம் தகராறு செய்த அவர்கள், சட்டைக்குள் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ஏட்டு 2 பேரையும் வெட்ட முயன்றனர்.

    உடனே ஏட்டுக்கள் சுதாரித்துக்கொண்டு விலகிய நிலையில், அங்கிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களது வாக்கி டாக்கி சேதம் அடைந்தது. ஏட்டுக்கள் 2 பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து எதிரெதிர் திசைகளில் ஓடினர். ஏட்டு தங்கதுரை எதிரே உள்ள ஓட்டலை நோக்கி ஓடினார். அப்போது அவருக்கு தலையில் லேசான வெட்டு விழுந்தது. பின்னர் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆலங்குளம் போலீசார் பஸ் நிலைய பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கல்யாண சுந்தரம் மற்றும் நிர்மல் குமாரை தேடி வருகின்றனர்.

    ×