search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா. இவரது மனைவி வகிதா கடந்த வாரம் 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வகிதாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்காசி போலீசில் வகிதா புகார் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் வகிதாவின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் தென்காசி படிக்கட்டு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தொழிலாளி பாரூக்நியாஸ் (வயது 50) என்பது தெரிவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நேரில் சென்று வீட்டில் பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டையே மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த தென்காசி போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். தென்காசி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    • வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
    • மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் தாழையூத்து, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் ஆகிய 2 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த 2 பஞ்சாயத்துக்களும் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது.

    இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும், உளவு பிரிவு போலீஸ் ஒருவரும் சாதி ரீதியில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் மீது மட்டும் வழக்கு போடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    இதனை கண்டித்து தேவர்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா அறிவித்திருந்தார்.

    இதனையொட்டி வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இசக்கி ராஜா தலைமையில் ஏராளமானவர்கள் முற்றுகை போராட்டத்திற்கு வந்தபோது அவர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சங்கரன்கோவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நின்றன.

    இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் தாழையூத்து, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

    அப்போது வன்னிக்கோனேந்தல் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவர் வள்ளிநாயகம் மயக்கம் அடைந்தார்.

    உடனே அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்று மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையே பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.
    • தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவராக சந்திரசேகரன் இருந்து வருகிறார். தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள திருநகரில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும், அப்பொழுது அவரது மனைவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது ஆத்திரத்தில் அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்திரசேகரை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் புகார் ஒன்றை தென்காசி போலீஸ் நிலையத்தில் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது, கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படும் நபர்கள் சந்திரசேகரின் செல்போனை எடுத்து சென்றதும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு கைப்பையை அங்கே விட்டு சென்றதும் தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் விட்டு சென்ற கைப்பையை எடுத்து போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.

    அந்த செல்போன் எண்ணின் சிக்னல் மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை பின் தொடர்ந்து சென்ற தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கூலிப்படை போல் செயல்பட்டதும், அவர்களை தென்காசி பகுதியை சேர்ந்த 2 பேர் இதுபோல் செய்ய சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் மற்றும் சக்திமாரி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் தி.மு.க. ஊராட்சி தலைவரான சந்திரசேகரனிடம், அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்று ஆடியோ இருப்பதாகவும், செல்போன் செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ உள்ளதாக கூறி சந்திரசேகரனை பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்து, அதன்படி, கோயம்புத்தூர் கும்பலை இங்கு வந்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் உள்ளதாக கூறி சந்திரசேகரனை மிரட்டி உள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரச்சினை ஏற்படவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து சந்திரசேகரனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சக்திமாரி (வயது 47), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), தேனி பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (22), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (20) கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த போத்திராஜ் (30), கோவை பகுதியை சேர்ந்த அருள் ஆகாஷ் (34) மற்றும் முக்கிய குற்றவாளியான தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் (40) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.
    • குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்குகள் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது. அந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கே அப்பகுதி மக்கள் நாள்தோறும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்று வருகின்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள லாரிகளால் குடிதண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் சாலைகளில் வெளியேறி வீணாகி வருகிறது. கடுமையான கோடையால் மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் கனிம வள லாரிகளால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான பூமிநாத் தலைமையில் ஏராளமானோர் திரண்டு குடிநீர் குழாய் செத்துவிட்டது எனக் கூறி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்குகள் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் சமூக ஆர்வலர் கஜேந்திரன், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், சிவ எழிலரசன், சுப்புக்குட்டி உள்ளிட்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
    • சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே ராயகிரி வடுகபட்டி வழியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 52), லாசர் (58) ஆகியோர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் 450 கிலோ குட்கா இருந்தது. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லாசரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர்.

    சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது.
    • கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 54). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. திடீரென கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில் 2 ஆடுகளும் அங்கேயே இறந்துவிட்டன.

    உடனே முருகன் ஓடி போய் ஆடுகளை பார்த்தபோது அந்த கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் ஆய்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
    • பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    தென்காசி:

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

    இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் இருந்து அம்பை, கல்லிடைக்குறிச்சி, நெல்லை சந்திப்பு வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இல்லை. மேலும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி வழித்தடத்தின் பிரதான கோரிக்கையான சென்னைக்கு தினசரி ரெயிலை மத்தியில் புதிய அரசு அமைந்ததும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினமும் இயக்க வேண்டும். மேலும் மும்பை, பெங்களூரு, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
    • சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.
    • பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். ஆனால் பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து தேர்தல் பிரிவு அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் பா.ஜனதா மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது.
    • காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று பெருங்கோட்டூர் சென்று கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, முப்பிடாதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×